Friday, 29 November 2013

கோடை கால சரும பாராமரிப்பு

கோடை காலம் வந்துவிட்டது..சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நமது சருமத்தை பாதுகாத்துக்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.

நமது வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்தே வெயில் தாக்கத்தால் சருமத்தில் ஏற்பட்ட டானிங், சோர்வு, சரும வறட்சி ஆகியவற்றை தடுத்து, உங்களின் பொலிவை மீட்டெடுக்கலாம்.

• எலுமிச்சை சாறுடன், தேவையான அளவு பன்னீர் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து மை போலக் கலந்துக் கொள்ளுங்கள்.இந்த கலவையை முகத்தில் மாஸ்க் போலப் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிடவும். இவ்வாறு வாரம் இரு முறை செய்தால் வெயிலினால் பாதிப்படைந்த உங்கள் சருமம் பட்டுப்போல் ஜொலிக்கும்.

• கோடை காலத்தில் ஏற்படும் சரும நிற மாற்றத்திற்கு உகந்தது முட்டை மாஸ்க். வெயிலில் இருந்து வீடு திரும்பியதும் உங்கள் முகத்தில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் மாஸ்க் போல பூசுங்கள். உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால் முட்டையின் வெள்ளை கருவுடன் சிறிது தேன் கலந்துக்கொள்ளலாம். இந்த கலவை உங்கள முகத்தில் இருக்கும் சோர்வை போக்குவதுடன் முகத்தில் இருக்கும் சுருக்கங்களையும் போக்கும்.

• தயிர் உங்களது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கும். ஒரு பாத்திரத்தில், தயிர், சிறிதளவு கடலை மாவு அல்லது முல்தானிமட்டி, அரைத்த ஆரஞ்சு தோல் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவவும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் முகம் பொலிவு பெறுவதுடன் சருமத்தில் ஈரப்பதமும் தக்கவைக்கபடும்.

• வெள்ளரிக்காய் சாறை, துருவிய வெள்ளரிக்காயுடன் கலந்து வெயிலினால் பொலிவிழந்த சருமத்தின் மீது பூசினால் சருமம் குளுமை பெறுவதுடன், பிரெஷ்ஷாகவும் இருக்கும்.

• சோற்று கற்றாழையின் சாறை உங்கள் கைகள், பாதங்கள், கழுத்து பகுதி மற்றும் முகத்தில் பூசிக்கொள்ளலாம்.

• சூரிய கதிர்வீச்சால் பெரும்பாலானோருக்கு கண்களை சுற்றி கருவளையம் ஏற்படும். முகத்தின் அழகை பாதிக்கும் இந்த கருவளையங்களை போக்கிட கண்களை மூடிக்கொண்டு உருளை கிழங்கு துண்டுகளை கண்களின் மீது வைக்கலாம். உருளை கிழங்கு சாறையும் கூட கண்களை சுற்றி தடவலாம்.

No comments:

Post a Comment